சென்னை: கே.கே.நகர் டாக்டர் அம்பேத்கர் குடில் பகுதியை சேர்ந்தவர் தேசமுத்து (53), பெயின்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 4 பிள்ளைகள். கடந்த 3 ஆண்டுகளாக தேசமுத்து காச நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தேசமுத்து நேற்று காலை படுக்கையிலேயே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து எம்.ஜி.ஆர்.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து தேசமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதேநேரம் மருத்துவமனையில் தேசமுத்துவின் கழுத்து இறுக்கப்பட்டுள்ளது. இதனால் கொலையாக இருக்கலாம் என்று போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அதன்படி போலீசார் தேசமுத்துவின் மகன்களான டேவிட் (எ) விஜய் (25), பாலு (23) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார் 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். அதில், நேற்று முன்தினம் இரவு தேசமுத்து தனது மனைவியை ஆபாசமாகவும், நடத்தை குறித்தும் அவதூறாக பேசி சண்டை போட்டது தெரியவந்தது. இதுகுறித்து மூத்த மகன் டேவிட் பலமுறை தந்தையை கண்டித்தும் அவர் மனைவியை அவதூறாக பேசியுள்ளார். பிறகு சண்டை முடிந்து தேசமுத்து தூங்கிவிட்டார். ஆனால் மூத்த மகன் டேவிட் தனது தாய் நடத்தை குறித்து அவதூறாக பேசிய தந்தை மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். நேற்று அதிகாலை 2 மணிக்கு தந்தை ேதசமுத்து ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, டேவிட் செல்போன் சார்ஜர் போடும் வயரால் தந்தையின் கழுத்தை இறுக்கி துடிக்க துடிக்க கொலை செய்தது தெரியவந்தது. ஆனால் கொலையை மறைக்கும் விதமாக காச நோய் காரணமாக தந்தை படுக்கையிலேயே இறந்துவிட்டதாக போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்து ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து தந்தையை கொலை செய்த மகன் டேவிட்டை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய செல்போன் சார்ஜர் வயரையும் பறிமுதல் செய்தனர். தாயை தவறாக பேசிய தந்தையை மகனே கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் கே.கே.நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
தாயின் நடத்தை குறித்து அவதூறாக பேசியதால் ஆத்திரம் சார்ஜர் வயரால் கழுத்தை இறுக்கி தூங்கிய தந்தை படுகொலை: காசநோயால் இறந்ததாக நாடகமாடிய மகன் கைது
previous post