சென்னை: நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் கேட்கும் கேள்விகளுக்கு ஒன்றிய அமைச்சர்கள் இந்தியில் பதில் அளிப்பது நாட்டின் ஒருமைப்பாட்டினை சிதறடித்துவிடும் என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி எச்சரித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வீரமணி, மக்களவையில் ஈரோடு தொகுதி உறுப்பினர் கணேசமூர்த்தி எழுப்பிய துணை கேள்விக்கு, ஒன்றிய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியில் பதில் அளித்ததையும், மக்களவை தலைவர் ஓம் பிர்லா, அமைச்சரின் பதிலை மொழிபெயர்ப்பின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு திமுக எம்.பி. தயாநிதிமாறன் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு அமைச்சர் ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா இந்தியில் தான் பதில் அளிப்பேன் என்றும் அதில் என்ன தவறு என்று கூறியது இந்தி பேசாத மாநில உறுப்பினர்களை வேதனைக்குள்ளாகியதையும் கி.வீரமணி அடிகோடிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் ஒன்றிய அமைச்சர்கள் இந்தியில் பதில் அளிப்பது வேற்றுமையில் ஒற்றுமையை குலைக்கும் என்றும் ஒருமைப்பாட்டை சிதறடிக்கும் என்றும் அதிகார வெறி மக்களாட்சியின் மாண்புக்கு எதிரானது எனவும் திராவிட கழக தலைவர் கி.வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். …