பழநி: கொடைக்கானலுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதித்து மாவட்ட நிர்வாகம் அதிரடி காட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்று£ல தளங்களில் ஒன்று கொடைக்கானல். இக்கொடைக்கானலுக்கு செல்ல பழநி மற்றும் வத்தலக்குண்டு என 2 வழித்தடங்கள் உள்ளன. பழநி வழித்தடத்தில் கொடைக்கானல் செல்வதற்கான தூரம் 67 கிலோமீட்டர் ஆகும். இச்சாலை முழுவதும் மலைப்பயணமாகும். கொடைக்கானல் மலைப்பகுதியில் அரிய வகை மூலிகைகள், விலைய உயர்ந்த மரங்கள் மற்றும் விலங்குகள் அதிகளவு உள்ளன. கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் தாங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை சாலையோரங்களில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் விலங்கினங்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. வனத்தீ ஏற்படும்போது பிளாஸ்டிக் பொருட்களால் தீயின் வீரியம் அதிகரிக்கிறது. இதுபோன்ற காரணங்களால் கொடைக்கானல் மலைப்பாதையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக வனத்துறை சார்பில் தேக்கந்தோட்டம் பகுதியில் சோதனைச் சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது. எனினும், பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுலா பயணிகள் வீசி எறிந்து செல்வது தொடர்ந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. கொடைக்கானல் செல்லும் பயணிகளின் வாகனங்களை சோதனைச் செய்ய சிவகிரிப்பட்டி ஊராட்சி மூலம் பால்பண்ணை அருகில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. ஊராட்சி அலுவலர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் கொண்டு சுற்றுலா வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை பறிமுதல் செய்யப்படுகின்றன. தொடர்ந்து ரூ.50ல் துவங்கி ரூ.200 வரை அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் பயன்பாடு குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது….