செங்கல்பட்டு: செங்கல்பட்டு பாலாறு பழைய பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் மற்றொரு பாலத்தில் கடும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய முக்கியமான சாலை சென்னை தேசிய நெடுஞ்சாலை. இந்த சாலையில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் செல்லக்கூடிய வாகனங்கள் ஒரு பாலமாகவும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய வாகனங்கள் மற்றொரு பாலமாகவும் உள்ளது.இதில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலமாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பாலமானது பாலாற்றின் குறுக்கே உள்ளது. இந்த பாலம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக சேதமடைந்தது. இச்சேதத்தை சரிசெய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதன் காரணமாக அச்சாலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை முற்றிலும் சரிசெய்ய நெடுஞ்சாண்துறை மற்றும் காவல்துறை நேற்று முதல் 40 நாட்களுக்கு இந்த சாலையில் பணிநடைபெறும் என்றும், அதனால் வாகனங்கள் இவ்வழியே செல்ல அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் நேற்று மாலை 4 மணியிலிருந்து நள்ளிரவு வரை சுமார் 15 கிலோமீட்டர்க்கும் அதிகமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று சுபமூகூர்த்தம் உள்ளிட்ட கல்யாண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சென்னை திரும்புவோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், போலீசார் இருந்தும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சூழல் உருவானது. இதன் காரணமாக மாற்றுவழி ஏற்பாடாக, கனரக வாகனங்கள், பேருந்துகள், ஆம்னி பேருந்துகளை உத்திரமேரூர் வழியாக சென்று பழையசீவரம் வழியாக செங்கல்பட்டு-காஞ்சிபுரம் சாலையில் அனுமதிக்கபட்டனர். மேலும், சிறிய வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவை மெய்யூர் சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் போக்குவரத்தானது சுமார் 8 கிலோமீட்டர் வரை இருந்துள்ளது. இதனால் இருசக்கர வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். தாங்கள் செங்கல்பட்டிற்கு செல்லவேண்டும் என்றால் 15கிமீ சுற்றிச்செல்ல வேண்டியுள்ளது; இதனால் தங்களை பாலத்தில் அனுமதிக்கக்கோரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருசக்கர வாகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் 40 நாட்கள் இதே நிலைதான் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அந்த பாலத்தில் உரிய காவலரை நியமித்து, ஆட்டோ, சிறிய ரக கார்கள், அவரச ஊர்திகளை போன்றவற்றை அனுமதிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. …