திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட வள்ளிநகர் மற்றும் கோட்டை பகுதியைச் சேர்ந்த பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், அங்குள்ள மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சிலருடன் கூட்டு சேர்ந்து கடன் வாங்கி கொடுப்பதும், வசூலிப்பதுமாக செயல்பட்டு வந்தார். அதனால் ஏற்பட்ட நம்பிக்கையால், கோட்டை மற்றும் வள்ளிநகர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் ஆதார் அட்டை அசல், வங்கி கணக்குப் புத்தகம் அசல், ஏடிஎம் அட்டை ஆகியவற்றை அந்த பெண்ணிடம் கொடுத்தோம். இந்த ஆவணங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த பெண், ரூ.3 கோடி வரை மோசடி செய்துள்ளார். மேலும் 10 பெண்களிடம் கடன் பெறுவதற்கு வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என கூறி நகை மற்றும் பணத்தை பெற்றும் ஏமாற்றியுள்ளார். திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கியின் நிலக்கோட்டை கிளை உள்பட தனியார் நிதி நிறுவனங்களை பயன்படுத்தி அந்த பெண் மோசடி செய்துள்ளார். இதுதொடர்பாக நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால், விசாரணைக்கு வராமல் வழக்குரைஞர் மூலம் அந்த பெண் காலம் தாழ்த்தி வருகிறார். இதனிடையே, சம்பந்தப்பட்ட பல்வேறு மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் ஊழியர்கள், 6 மாதங்களுக்கு முன்பே கடன் பெற்றுள்ளதாகவும், அந்த 6 மாதங்களுக்கான கடன் தவணை முறையாக செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். மீதமுள்ள கடன் தொகையை செலுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட பெண் மீது நடவடிக்கை மேற்கொண்டு, மோசடி செய்த பணத்தை மீட்பதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்….