சென்னை: நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டமன்ற சிறப்பு கூட்டம் வரும் 8ம் தேதி கூட்டப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நேற்று சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான மாணவ, மாணவிகள் சேர்க்கைக்காக நீட் தேர்வு எழுதுகின்ற முறை தமிழக ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களை பெரிதும் பாதிக்கும் என்பதை அறிந்த முதல்வர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவை இல்லை என்பதற்காக, அதற்கு ஒரு சட்ட முன்வடிவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி கொண்டுவந்தார். சட்டமன்றத்தில் முழுமையாக விவாதிக்கப்பட்டு ஒருமனதாக அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆளுநர், குடியரசு தலைவருக்கு அனுப்புவதற்கு பதிலாக 142 நாட்கள் கழித்து சட்டப்பேரவை தலைவராகிய எனக்கு கடந்த 1.2.2022 அன்று மீண்டும் பரிசீலனை செய்து அனுப்புங்கள் என்ற அடிப்படையில் திரும்ப அனுப்பப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 3.2.2022 அன்று கவர்னர் மாளிகையில் இருந்து ஒரு பத்திரிகை செய்தியாகவும் வெளியிடப்பட்டது. இதையறிந்த நமது முதல்வர் சட்டமன்றத்தில் உள்ள அனைத்து கட்சியினர் கூட்டத்தை கூட்டி கருத்துக்களை கேட்டதன் அடிப்படையில் மீண்டும் சட்டமன்றத்தை கூட்டி அதில் விவாதித்து குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்று முடிவெடுத்ததை தமிழக சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் அலுவல் சாரா தகவல் மூலமாகவும், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும் அதன் ஆணையின் நகலையும் என்னுடைய கவனத்துக்கு கொண்டுவந்து தமிழக மாணவ, மாணவர்களின் மருத்துவப்படிப்பு சார்ந்த மிக முக்கியமான விஷயம் என்பதால் மீண்டும் சட்டமன்றத்தை கூட்டி விவாதித்து குடியரசுத்தலைவருக்கு அனுப்புவது தான் சிறந்தது என்று தெரிவித்தனர்.சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவை விதி 143ன் கீழ் சட்டமன்றத்தினுடைய சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்டி நீட் சம்பந்தப்பட்ட இந்த சட்ட முன்வடிவை மீண்டும் சட்டமன்றத்தில் விவாதித்து குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்று கடிதம் மூலம் என்னுடைய கவனத்துக்கு கொண்டுவந்தார். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு வருகின்ற 8ம் தேதி தலைமை செயலகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் காலை 10 மணிக்கு தமிழக அரசின் சட்டமன்றத்தினுடைய சிறப்பு கூட்டத்தை கூட்டுவது என்று தீர்மானித்துள்ளேன். அதன் அடிப்படையில் கவர்னர் எனக்கு அனுப்பியது அனைத்து உறுப்பினர்களுக்கும் தபால் மூலம் அனுப்பிவைக்கப்படும். கவர்னர் சட்டமன்ற தலைவருக்கு அனுப்பியதை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தான் தெரிவிக்க முடியுமே தவிர, பொதுவெளியில் அதை தெரிவிக்க முடியாது. நாங்கள் தான் அதில் முடிவெடுக்க முடியும். இவ்வாறு கூறினார்….