திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி தேர்தலில் மாஜி அமைச்சர் நத்தம் விசுவநாதன் ஆதரவாளர்கள் ஒருவருக்கு கூட சீட் தராததால் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழகத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையில் தனித்தனி அணிகள் பிரிந்தபோது, தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் அணியில் மாஜி அமைச்சர் நத்தம் விசுவநாதனும், அவரது ஆதரவாளர்களும் சேர்ந்தனர். ஆனால், திண்டுக்கல் சீனிவாசன் எடப்பாடி ஆதரவாளராகவே நீடித்தார். காலப்போக்கில் நத்தம் விசுவநாதன், எடப்பாடிக்கு விசுவாசமாக மாறினார். இதனால் அவருக்கு மாவட்டச் செயலாளர் போஸ்ட் கூட தரப்பட்டது. ஆனாலும், திண்டுக்கல் மாவட்டத்தில் இவருக்கும், திண்டுக்கல் சீனிவாசனுக்கும் எப்போதுமே செட் ஆகாது. சமீபத்தில் நடந்த மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கூட இவர்களது மோதல் எதிரொலித்தது. இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகளில் நத்தம் விசுவநாதன் ஆதரவாளர்கள் 5 வார்டுகளில் போட்டியிட சீட் கேட்டனர். ஆனால் அனைத்து வார்டுகளையும், திண்டுக்கல் சீனிவாசனும், முன்னாள் மேயர் மருதராஜ் ஆதரவாளர்களும் பகிர்ந்து கொண்டதால் நத்தம் விசுவநாதன் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேர்தல் பணியை புறக்கணிக்க திட்டம் தீட்டி மவுன புரட்சி செய்ய ஆயத்தமாகி வருகின்றனர். இதுகுறித்து நத்தம் விசுவநாதன் ஆதரவாளர்களிடம் கேட்டபோது, ‘நத்தம் விசுவநாதன் தலைமையில் தர்மயுத்தம் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு திண்டுக்கல் மாநகராட்சியில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. திண்டுக்கல் சீனிவாசன் ஆதரவாளர்களுக்கு மட்டும் சீட் தரப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இதன்மூலம் இருவரும் (திண்டுக்கல் சீனிவாசன் – நத்தம் விசுவநாதன்) இணைந்து விட்டதாக, போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்களே தவிர, உண்மையில் அவர்களது மனம் இணையவில்லை என்பது மாநகராட்சி சீட்டு ஒதுக்கீட்டு விவகாரத்தில் ெவளியுலகத்திற்கு தெரிந்தது’ என்றனர்….