Sunday, September 29, 2024
Home » தமிழகத்தில் 21 மாவட்டங்களில் தொற்று பரவல் குறைந்துள்ளது: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் தொற்று பரவல் குறைந்துள்ளது: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

by kannappan

சென்னை: தமிழகத்தில் 21 மாவட்டங்களில் நோய் தொற்று பரவல் குறைய தொடங்கியுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 20 மெகா தடுப்பூசி முகாம் நடந்து வரும் நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி முகாமில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் படிப்படியாக நோய் தொற்று குறைய தொடங்கியுள்ளது. 21 மாவட்டங்களில் நோயின் பரவல் குறைந்துள்ளது. கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், கோவை போன்ற மாவட்டங்கள் சவாலாக உள்ளது. இந்த மாவட்டங்களில் போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் மற்றும் மருத்துவமனைகள் என 2 லட்சத்து 11 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். 7 சதவீதம் பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். கடந்த ஜனவரி 1 முதல் 26 வரை கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களில் 91 சதவீதம் பேர் 50 வயதுக்கு மேற்பட்டோர். 70 சதவீதம் பேர் தடுப்பூசியே செலுத்தாதவர்கள் அல்லது ஒரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள். 93 சதவீதம் பேர் இணை நோய் உள்ளவர்கள். எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர  வேண்டும். சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் நோய்த்தொற்று குறைந்து வருகிறது. பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தடுப்பூசி செலுத்தாதவர்கள் செலுத்திக்கொள்ள வேண்டும். புதுவகையான கொரோனா பரவி வருகிறது என சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்பாமல், அதிகாரப்பூர்வ தகவலை மட்டும் நம்ப வேண்டும். கட்டுப்பாடுகள் மட்டும் தீர்வு தராது, கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடித்து முகக்கவசம் அணிதல் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதே கொரோனா பரவலை குறைக்க முடியும் என மருத்துவ  வல்லுநர்கள் கூறிய கருத்துகளின் அடிப்படையில் தளர்வுகள் தரப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி நடத்த தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடக, ஆந்திர மாநில எல்லைப்பகுதிகளில் சற்று சவாலாக உள்ளது. தொற்று குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  பொதுமக்கள் இப்போது உள்ள ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கினால் கொரோனா பரவல் குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார். இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை டீன் பாலாஜி, நிலைய மருத்துவ அதிகாரி ரமேஷ் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். புதுவகையான கொரோனா பரவி வருகிறது என சமூக வலைத்தளங்களில் வரும் வதந்தி களை நம்பாமல், அதிகாரப்பூர்வ தகவலை மட்டும் நம்ப வேண்டும்….

You may also like

Leave a Comment

six + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi