பெஷாவர்: ‘பாகிஸ்தானில் மத தீவிரவாதிகளால் இடித்து தள்ளப்பட்ட இந்து கோயில் மீண்டும் கட்டித் தரப்படும்,’ என கைபர் பக்துன்கவா மாகாண முதல்வர் அறிவித்துள்ளார். பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில், கராக் மாவட்டத்தில் உள்ள தெரி என்ற கிராமத்தில் இந்துக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்கள் வழிபடுவதற்காக இங்கு கோயில் உள்ளது. இது விரிவாக்கம் செய்யப்படும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இதை விரும்பாத தீவிரவாத ஆதரவு இஸ்லாமிய அமைப்புகள், இந்த கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களுடன் கடந்த புதன்கிழமை சென்று கோயிலை இடித்து தள்ளின. இதற்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய அரசு தூதரக ரீதியாகவும் பாகிஸ்தான் அரசிடம் நேற்று தனது எதிர்ப்பை பதிவு செய்தது.இந்நிலையில், பெஷாவரில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு கைபர் பக்துன்கவா மாகாண முதல்வர் முதல்வர் முகமது கான் அளித்த பேட்டியில், ‘‘மத சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கும். கோயிலை இடித்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இடிக்கப்பட்ட கோயில் மீண்டும் கட்டித் தரப்படும்,’’ என்றார்….