ஈரோடு: பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக ஈரோட்டில் இன்று நடந்த ஜவுளி சந்தையில் வியாபாரிகள், பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடப்பது வழக்கமாகும். தமிழகம் மட்டுமல்லாது கர்நாடக, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான மொத்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஜவுளிகளை கொள்முதல் செய்வார்கள். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 4 வாரங்களாக ஈரோடு ஜவுளி சந்தையில் வியாபாரம் அதிக அளவில் நடைபெற்றது. இந்நிலையில், இன்று நடந்த ஜவுளி சந்தையில் வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக வாடிக்கையாளர்கள் யாரும் வரவில்லை என்று வியாபாரிகள் தரப்பில் கூறினர். இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், ‘பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக ஜவுளி சந்தைக்கு வாடிக்கையாளர்கள் யாரும் வரவில்லை. மேலும் வியாபாரிகளும் குறைந்த அளவிலேயே கடைகளை திறந்துள்ளனர்’ என்றனர்….