Saturday, October 5, 2024
Home » கர்நாடக அமைச்சர் மகனின் ஆபாச வீடியோ? ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய 2 பேர் கைது

கர்நாடக அமைச்சர் மகனின் ஆபாச வீடியோ? ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய 2 பேர் கைது

by kannappan

பெங்களூரு: கர்நாடகாவில் பாஜ அமைச்சர் மகன் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த 2 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடகாவில் பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இதில் கூட்டுறவு துறை அமைச்சராக எஸ்.டி.சோமசேகர் இருக்கிறார். இவரது மகன் நிஷாந்த் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருப்பது போன்ற வீடியோ வாட்ஸ் அப் மூலம் அவரது செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் அனுப்பி வைத்துள்ளனர். மகன் வெளிநாட்டில் இருப்பதால்,  செல்போனை அமைச்சர் சோமசேகர் எடுத்து பார்த்தபோது பெண் ஒருவருடன் மகன் நிஷாந்த் இருக்கும் வீடியோ இருந்தது. இதுகுறித்து வெளிநாட்டில் இருக்கும் மகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே அந்த வீடியோவில் என்னுடைய படம் மார்பிங் செய்துள்ளனர் என்று கூறினார். அதே நேரம் வீடியோவை அனுப்பி வைத்த கும்பல் சோமசேகரின் மகனிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டலும் விடுத்துள்ளனர். இது குறித்து நிஷாந்த் சைபர் கிரைம் போலீசுக்கு  ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். மேலும் அமைச்சர் சோமசேகர் தரப்பிலும்,மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. அவர்கள் வீடியோ அனுப்பி வைக்கப்பட்ட வாட்ஸ் அப் எண் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து நேற்று ராகுல் பட் என்பவரை கைது செய்தனர். இவர் அமைச்சர் சோமசேகருக்கு தூரத்து உறவினர் என்று கூறப்படுகிறது. இவருக்கு உடந்தையாக இருந்த கோவா வாலிபர் ஒருவரையும்  போலீசார் கைது செய்தனர்.  கைதான 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜாரகிஹோளியின் ஆபாச வீடியோ பரபரப்பு அடங்குவதற்கு முன்பு அமைச்சரின் மகனின் வீடியோ விவகாரம் அம்மாநில அரசியலில் சர்ச்சையை எழுப்பியுள்ளது. * 7 அமைச்சர்களின் சி.டி விவகாரம் கர்நாடக பாஜவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளியின் ஆபாச சி.டி வெளியான சில வாரங்களில், மேலும் சில பாஜவினரின் ஆபாச சி.டிவிகளை சமூக ஆர்வலர்கள் மற்றும் மர்ம நபர்கள் சிலர் வெளியிடுவதாக மிரட்டல்விடுத்து வந்தனர். இதில் பதட்டம் அடைந்த பாஜ அமைச்சர்களான சுதாகர், எஸ்.டி சோமசேகர் உள்பட 7 அமைச்சர்கள் நீதிமன்றத்தை நாடி அந்த சி.டிகள் வெளியிட முடியாத அளவிற்கு தடை ஆணை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆபாச வீடியோ அனுப்பிவைத்த சிம்கார்டு காங்கிரஸ் எம்எல்ஏவின் மகளுக்கு சொந்தமானது என்பதால் சந்தேகம் வலுத்துள்ளது. * அமைச்சர், எம்எல்ஏ மறுப்பு  ஆபாச வீடியோ குறித்து அமைச்சர் சோமசேகர் கூறுகையில், ‘ அரசியல் பழி வாங்கும் செயல்.  அவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்கும்படி போலீசாருக்கு தெரிவித்துள்ளேன். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்படி போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளேன்’ என்றார். காங் எம்.எல்.ஏ கூறுகையில், ‘அந்த எண் கொண்ட சிம் எனது மகளுக்கு சொந்தமானது தான். ஆனால் தற்போது அவர் லண்டனில் உள்ளார். விடுமுறைக்கு வந்தபோது, நண்பரிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். அதை அவர்கள் தவறுதலாக பயன்படுத்தி உள்ளனர். இதுதொடர்பாக மகளிடம் பேசியபோது, அவர் எனக்கு இதுக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னுடைய சிம்கார்டை தவறாக பயன்படுத்தியுள்ளனர் என்று கூறியுள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு நான் தகவல் கொடுத்துள்ளேன்’ என்றார்….

You may also like

Leave a Comment

fifteen − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi