Tuesday, October 1, 2024
Home » திருவண்ணாமலை, திருத்தணி உட்பட 7 கோயில்களில் மருத்துவ மையங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை, திருத்தணி உட்பட 7 கோயில்களில் மருத்துவ மையங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

by kannappan

சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உட்பட 7 கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  தமிழகத்தில் உள்ள கோயில்களில் அதிகளவில் பக்தர்கள் வருகை புரியும் 10 கோயில்கள் தேர்வு செய்யப்பட்டு, அக்கோயில்களில், தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனுக்குடன் உயிர் காக்கும் மருத்துவ முதலுதவி அளித்திடும் வகையில் இரண்டு மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள், இரண்டு பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களை கொண்டு மருத்துவ மையங்கள் ஏற்படுத்த அறநிலையத்துறை முடிவு செய்தது. இது தொடர்பாக, கடந்த சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின்போது, பக்தர்கள் அதிகளவில் வருகை புரியும் 10 கோயில்களில் தேவையான மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுகளுடன் கூடிய முதலுதவி மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். அதன்படி, முதற்கட்டமாக, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில், சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் ஆகிய 7 கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.  இந்த மருத்துவ மையங்களில் முதலுதவி செய்வதற்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ரத்த அழுத்த மாணி, படுக்கைகள், உயிர்காக்கும் மருந்துகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. இதனால் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நேரத்தில் பேருதவியாக செயல்படும். இப்பணிக்காக ஓர் மருத்துவ மையத்திற்கு ஓராண்டிற்கு சுமார் ₹30 இலட்சம், வீதம் 10 திருக்கோயில் மருத்துவ மையங்களுக்கு மொத்தம் ₹3 கோடி கோயில் நிதியிலிருந்து செலவு செய்யப்படுகிறது. கோயில் மருத்துவ மையங்களில் பணியாற்றிட தகுதியான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு கோயில்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.இந்த நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் கே.சேகர்பாபு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு, முதன்மைச் செயலாளர் சந்தர மோகன், ஆணையர் குமரகுருபரன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன், கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் சமீரன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்….

You may also like

Leave a Comment

seven + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi