புளியங்குடி, அக்.9: புளியங்குடியில் பெட்ரோல் பங்க்கை மூடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர். தென்காசி மாவட்டம், புளியங்குடியில் ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட இடத்தில் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. பங்க் செயல்பட்டு வந்த இடத்தை நிர்வகிப்பது தொடர்பாக ஒரே சமூகத்தைச் சேர்ந்த 4 பிரிவினர் சொந்தம் கொண்டாடியதால் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இந்நிலையில் கடந்த மாதம் தீர்ப்பு வந்தையடுத்து இரண்டு பிரிவினர், பெட்ரோல் பங்க்கை உடனடியாக காலி செய்துவிட்டு இடத்தை ஊரில் ஒப்படைக்க கூறினர்.இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெட்ரோல் பங்க்கில் டீசல் இறக்குவதற்காக ஒரு லாரி வந்தது. அதை அவர்கள் மறித்து பெட்ரோல் பங்க்கில் டீசலை இறக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். பின்னர் யாரும் நுழையாதபடி கயிறு கட்டி பெட்ரோல் பங்க்கை மூடி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தென்காசி டிஎஸ்பி நாகசங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து போக கூறினர்.