சென்னை: சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம், பத்திர பதிவு கட்டணம் உயர்வு, குடிநீர், கழிவு நீர் கட்டண உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் அறிவித்திருந்தார். அதன்படி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் தலைமையில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
மாநகராட்சிக்கு உட்பட்ட வட்டங்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் நேற்று காலை 10.30 மணி அளவில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் திரண்டு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினார்கள். சென்னையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சிக்குட்பபட்ட 200 வார்டுகளிலும் மனித சங்கிலி போராட்டம் நடை பெற்றது. அதன்படி, ராயபுரம் எம்.சி. ரோடு சுழல் மெத்தை பகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் என பலரும் பங்கேற்று கை கோர்த்து நின்றனர். அதேபோன்று வில்லிவாக்கம், கொளத்தூர். கோடம்பாக்கம், வேளச்சேரி, கோயம்பேடு, சோழிங்கநல்லூர், ஆலந்தூர், கோட்டூர்புரம் உள்பட அனைத்து வார்டுகளிலும் மனிதசங்சிலி போராட்டம் நடைபெற்றது.