Tuesday, October 8, 2024
Home » ஆசிய மனிதவள மேம்பாட்டுக் குழு சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

ஆசிய மனிதவள மேம்பாட்டுக் குழு சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

by Karthik Yash

சென்னை: ஆசிய எச்ஆர்டி அவார்டு சார்பில் சமுதாய மேம்பாட்டிற்காகவும், படைப்பாற்றல், புத்தாக்கத்தை வளர்ப்பதற்கான திறன் மேம்பாட்டு சூழலமைப்பை வலுப்படுத்துவதிலும் உள்ள தலைமைத்துவ உறுதியையும் விடாமுயற்சியையும் அங்கீகரிக்கும் விதமாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஆசிய எச்ஆர்டி அவார்டு நிறுவனரும், சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான டத்தோ டாக்டர் பாலன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆசிய மனிதவள மேம்பாட்டுக் குழுவின் தலைவர் பக்ரைன் நாட்டின் முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் பாமி ஜோவ்தர், இக்குழுவின் துணைத் தலைவர் மாலத்தீவு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி முகமது வஹீத் உள்ளிட்டவர்கள் இங்கு வந்துள்ளனர். இதற்கு முன்பு வாழ்நாள் சாதனையாளர் விருது பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பிடல் வி. ராமோசுக்கும், போஸ்னியாவின் பிரதமர் ஹாரிஸ் டால்சுவேக்கும், மலேசியா நாட்டின் சராவக் முதல்வர் அடேனம் சதேம் போன்ற பல தலைவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.

எதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது என்றால், மனிதவள மேம்பாட்டிற்கு எந்த விதத்தில் அவர்களது பங்களிப்பு இருக்கின்றது என்பதை கருத்தில் கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது விழாவுடன், உலகளாவிய ஒரு மாநாடும் நடக்கிறது. இதில், ஏறத்தாழ 350 மனிதவள மேம்பாட்டு நிபுணர்களும் மற்றும் தலைமை நிர்வாகிகளும் பல நாடுகளிலிருந்து வருகிறார்கள். இந்த நிகழ்வுடன் தான் இந்த விருது வழங்கும் விழாவும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு குறிப்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இந்த விருது வழங்கப்பட வேண்டும் என்று தேர்வு குழு விருப்பப்பட்டதற்குக் காரணம், தமிழ்நாட்டில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பதை பார்த்துத்தான் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

முதலாவதாக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவற்றின் மூலம் பல லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளித்திருக்கிறார்கள், வேலைவாய்ப்புகளை அதிகரித்திருக்கிறார்கள். இதனால், தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வையான, ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கல்வி, மனிதவள மேம்பாடு இதுதான் வறுமையை ஒழிக்கும் என்பதில் இக்குழு உறுதியான நம்பிக்கையை கொண்டுள்ளது. இதற்காகத்தான் இந்த ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது தமிழ்நாடு முதல்வருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

17 + sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi