கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் பதுலியா பிளாக் பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது. இங்கு நேற்று காலை 10.30 மணி அளவில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில், 6 பேர் உயிரிழந்தனர் பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் 6 பேர் இறந்ததாக மேற்கு வங்கம் மின்சார மேம்பாட்டு நிறுவனம் கூறி உள்ளது. இதுவரை 3 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் மீட்புப்பணிகள் நடந்து வருவதாக போலீசார் கூறி உள்ளனர். இந்த சுரங்கத்தில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் வெடிக்க வைக்கப்பட்டதற்காக டெட்டனேட்டர்கள் கொண்டு செல்லப்பட்ட போது அவர் நடுவழியில் வெடித்துச் சிதறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.