திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் சித்திக். இவர் மலையாள நடிகர்கள் சங்க பொதுச் செயலாளராகவும் இருந்தார். இந்நிலையில் நடிகர் சித்திக் கடந்த சில வருடங்களுக்கு முன் திருவனந்தபுரத்திலுள்ள ஒரு ஓட்டல் அறையில் தன்னை பூட்டிப் போட்டு பலாத்காரம் செய்ததாக ஒரு நடிகை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அவர் மீது திருவனந்தபுரம் மியூசியம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அவருக்கு 2 வாரங்களுக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் தன்னிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி போலீசுக்கு நடிகர் சித்திக் இமெயில் மூலம் தகவல் அனுப்பினார்.
இதைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல் அவரிடம் விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு தீர்மானித்தது. இதன்படி நடிகர் சித்திக் திருவனந்தபுரத்தில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காலை ஆஜரானார். ஆனால் சிறப்பு விசாரணைக் குழு எஸ்பி மெரின் ஜோசப் திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் உதவி கமிஷனர் அலுவலகத்தில் இருந்ததால் சித்திக் உடனடியாக அங்கு சென்றார். இங்கு வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்றது. சுமார் மூன்று மணி நேர விசாரணைக்குப் பின் போலீசார் நடிகர் சித்திக்கை விடுவித்தனர். இதன் பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு கொச்சிக்கு சென்றார்.
* நடிகர் ஜெயசூர்யாவுக்கு போலீஸ் நோட்டீஸ்
கடந்த சில வருடங்களுக்கு முன் திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் வைத்து நடந்த ‘தே இங்கோட்டு நோக்கியே’ என்ற மலையாளப் படத்தின் படப்பிடிப்பின் போது பிரபல நடிகர் ஜெயசூர்யா தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவாவை சேர்ந்த ஒரு நடிகை போலீசில் புகார் கொடுத்தார். தன்னைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாகவும், திருவனந்தபுரத்திலுள்ள தன்னுடைய பிளாட்டுக்கு வருமாறு கூறியதாகவும் அந்த நடிகை தன்னுடைய புகாரில் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து நடிகர் ஜெயசூர்யா மீது திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக வரும் 15ம் தேதி திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு கூறி நடிகர் ஜெயசூர்யாவுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.