டெல்லி : இந்தியாவின் மிக பெரிய நிறுவனங்களின் ஒன்றான இண்டிகோவின் மென் பொருளில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் நாடு முழுவதும் அந்நிறுவனத்தின் சேவையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இண்டிகோ விமான சேவை நிறுவனத்தில் செக் இன் மற்றும் முன்பதிவு செய்வதற்கான இணையதள மென்பொருளில் இன்று மதியம் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. பல்வேறு நகரங்களுக்கு செல்வதற்கு விமான நிலையங்களில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் மென்பொருள் கோளாறால் பெரும் பாதிப்பை சந்தித்தன.
விமான நிலையங்களில் செக் இன் பகுதி மற்றும் தங்கள் உடைமைகளை சோதனைக்கு ஒப்படைக்கும் இடத்திலும் இண்டிகோ பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. விமானங்களை உரிய நேரத்தில் இயக்க இயலாமல் தாமதமான சூழலில் மென் பொருள் கோளாறு ஏற்பட்டதற்கு அந்நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. இந்த கோளாறை சரி செய்யும் முயற்சியில் தங்கள் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டு வருவதாக எக்ஸ் தளத்தில் இண்டிகோ விமான சேவை விளக்கம் அளித்துள்ளது.