திருச்சி : திருச்சியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு காளி கோயிலில் அகோரிகள் நடத்திய நவராத்திரி பூஜையின்போது அகோரிகள் மேளம் அடித்து, சங்கு நாதங்கள் முழங்கினர்.திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி கோயில் உள்ளது. காசியில் அகோரி பயிற்சி பெற்ற மணிகண்டன் இந்த கோயிலை நிர்வகித்து வருகிறார். இந்த கோயிலில் அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி மற்றும் விஷேச காலங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த கோயிலில் ேநற்றுமுன்தினம் நள்ளிரவு நவராத்திரி சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஜெய் அகோரகாளி, சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நடந்த யாகபூஜையில் அகோரிகள் 15 பேர் தங்களது உடல் முழுவதும் திருநீறு பூசி கொண்டு பூஜையில் பங்கேற்றனர்.
அகோரி மணிகண்டன், ருத்ராட்ச மாலைகளை கையில் ஏந்தியவாறு மந்திரங்களை ஜெபித்து நவதானியங்கள், பழ வகைகள் உள்ளிட்ட பொருட்களை அக்னி குண்டத்தில் இட்டு யாகபூஜை நடத்தினார். இந்த யாக பூஜையின்போது அகோரிகள் டம்ரா மேளம் அடித்து, சங்கு நாதங்கள் முழங்கினர். பின்னர் ஜெய் அகோரகாளி, ஜெய்அஷ்ட காலபைரவர் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இதில் பெண் அகோரிகள் உட்பட தமிழகம் மற்றும் வடமாநில பக்தர்கள் பங்கேற்றனர்.