Saturday, October 5, 2024
Home » துபாய், மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 6 கிலோ தங்கம் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலில் 4 பேர் கைது

துபாய், மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 6 கிலோ தங்கம் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலில் 4 பேர் கைது

by Ranjith

மீனம்பாக்கம், அக். 5: துபாய் மற்றும் மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.4.2 கோடி மதிப்புள்ள 6 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. துபாய் மற்றும் மலேசியாவில் இருந்து, பெரும் அளவு தங்கம், சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ரகசிய தகவல் கொடுத்தனர். இதையடுத்து சுங்க அதிகாரிகள், கடந்த சில தினங்களாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஆண் பயணிகள், மலேசியா நாட்டு சுற்றுலா பயணிகள் விசாவில் சென்று விட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்தனர். அவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவர்களை நிறுத்தி விசாரித்த போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் அவர்களுடைய உடைமைகளை சோதனையிட்டனர். அப்போது இரண்டு பேருடைய சூட்கேஸ்களிலும் ரகசிய அறைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதை உடைத்துப் பார்த்தபோது, தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 3 கிலோ எடை உடைய தங்க கட்டிகள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.2.1 கோடி. இதையடுத்து சுங்க அதிகாரிகள், கடத்தல் பயணிகள் இரண்டு பேரையும் கைது செய்த, தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

அதோடு அவர்களிடம் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்திய போது, துபாயிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் மற்றொரு பயணிகள் விமானத்தில் மேலும் 2 பயணிகள் இதுபோல் தங்கம் கடத்தி வருவதாக தகவல் தெரிவித்தனர். எனவே, சுங்க அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர். துபாயிலிருந்து சென்னை வரும் தனியார் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும், சந்தேகத்துக்கு இடமான இரண்டு ஆண் பயணிகளையும் நிறுத்தி விசாரித்தனர்.

அவர்களின் சூட்கேஸ்களை திறந்து பார்த்து சோதித்தபோது, அவர்களின் சூட்கேஸ்களிலும் ரகசிய அறைகள் இருந்தன. அதை உடைத்து பார்த்தபோது 3 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ரூ.2.1 கிலோ. இதை தொடர்ந்து, சுங்க அதிகாரிகள் அவர்களை கைது செய்து, தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில், இவர்களும் மலேசிய நாட்டிலிருந்து வந்த இரண்டு கடத்தல் பயணிகளும், ஒரே கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் தங்கம் கடத்தும் சர்வதேச கும்பலிடம், கூலிக்காக கடத்தலில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து சுங்க அதிகாரிகள் 4 சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களும், சென்னையில் தங்க கட்டிகளை யாரிடம் கொடுப்பதற்காக எடுத்து வந்தனர். சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் சென்னையில் எங்கு தங்கி உள்ளனர் என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து துபாய், மலேசியாவிலிருந்து வந்த 2 விமானங்களில், ரூ.4.2 கோடி மதிப்புடைய 6 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

11 + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi