சீர்காழி: சீர்காழி அருகே பூம்புகார் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இரண்டு பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற 37 மீனவர்களை கடந்த மாதம் 21ம்தேதி காலை நெடும்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூற இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இதே போல் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கடந்த மாதம் 4ம் தேதி 4 மீனவர்களும், கடந்த 7ம் தேதி 14 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் காவல் முடிந்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, 21ம் தேதி கைதான 37 மீனவர்களையும் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடிக்க கூடாது என எச்சரித்து நீதிமன்றம் விடுதலை செய்தது. மற்ற 18 பேரில் 4 படகு ஓட்டுனர்களுக்கு தலா ரூ.40 லட்சம் அபராதமும், ஆனந்தபாபு (36) என்ற மீனவர் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன் பிடித்தற்காக 18 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. 4 பேர் அபராதம் கட்டாததால் சிறயைில் அடைக்கப்பட்டனர்.மற்ற 13 மீனவர்கள் வரும் 5 ஆண்டுகளில் எல்லை தாண்டி மீன் பிடித்தால் 18 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் விடுதலை செய்தது.