புதுடெல்லி: கனிம வளங்கள் தொடர்பான உரிமைகளுக்கு மாநில அரசுகள் வரி விதிக்க தடையில்லை என்ற விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மறு ஆய்வு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கனிம வளங்கள் மீது வரி விதிப்பதற்கு மாநில அரசுகளுக்கு உரிமை இருக்கிறதா இல்லையா என்பது குறித்து வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் அடங்கிய அமர்வில் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், ஏஎஸ் ஓகா, பிவி நாகரத்னா, ஜேபி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, உஜ்ஜல் புயான், சதீஷ் சந்திர ஷர்மா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஜூலை மாதம் தீர்ப்பளித்தது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் எட்டு நீதிபதிகள் கடந்த ஜூலை 25ம் தேதி வழங்கி தீர்ப்பில். அதில், ‘‘கனிம வளம் அமைந்துள்ள ஒன்றிய நிலப்பரப்பு என்பது மாநில அரசாங்கத்திடம் உள்ளது. கனிமங்களுக்கான உரிமையை அரசாங்கத்திடம் உள்ளது. எனவே கனிம வளங்கள் தொடர்பான உரிமைகளுக்கு மாநில அரசுகள் வரிவிதிக்க தடையில்லை என்று உத்தரவிட்டிருந்தனர். ஆனால் நீதிபதி நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தார்.
இந்த விவகாரத்தில் வழங்கப்பட்ட முந்தைய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி ஒன்றிய அரசு, கர்நாடகா இரும்பு மற்றும் எக்கு உற்பத்தியாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து மேற்கண்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் முன்னிலையில் பட்டியலிடப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது வழங்கப்பட்ட தீர்ப்பில், ‘‘இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் 2013ன் சட்ட விதிகளின் படி முன்னதாக எட்டு நீதிபதிகளால் பெரும்பான்மையோடு வழங்கப்பட்ட தீர்ப்பில் எந்தவித முரண்பாடுகளும் கிடையாது. எனவே அதனை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை. என இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மறுஆய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.