சென்னை: பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி ஸ்ரீராம் கூறினார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம் கடந்த வாரம் பதவியேற்றார். அதன் பிறகு அவருக்கு உயர் நீதிமன்றம் சார்பில் வரவேற்பு நடத்தப்பட்டது. தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் தலைமை நீதிபதியை வரவேற்று பேசினார். இதை தொடர்ந்து தமிழ்நாடு பார்கவுன்சில், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், மெட்ராஸ் பார் அசோசியேசன், பெண் வழக்கறிஞர்கள் சங்கம், லா அசோசியேசன் நிர்வாகிகள் வரவேற்று பேசினர். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சங்க நூலக அரங்கில் தலைமை நீதிபதிக்கு பாராட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சியில் தலைமை நீதிபதியை வரவேற்று சங்க செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார் பேசினார். சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமை உரையாற்றினார். நிகழ்ச்சியில் சங்க துணை தலைவர் அறிவழகன், பொருளாளர் ஜி.ராஜேஷ், நூலகர் வி.எம்.ரகு மற்றும் மூத்த, இளைய செயற்குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து தலைமை நீதிபதி பேசும்போது, ‘‘மிகவும் பாரம்பரியமிக்க இந்த நீதிமன்றத்தில் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சென்னை எனக்கு புதிதல்ல. இந்த சங்கம் மிக நீண்ட வரலாற்றை கொண்டது. உயர் நீதிமன்றத்தில் கடல்சார் வழக்குகள் மீது மட்டும் கவனம் செலுத்தாமல் அனைத்து விதமான வழக்குகளிலும் தீர்வு காண்பேன்’’ என்றார்.