திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மணவாள நகரில் அமைந்துள்ள கிரைஸ்ட் கிங் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு பள்ளி நிறுவனத் தலைவர் ஜி.தனராஜ் தலைமை தாங்கினார். முதல்வர் ஜூடித் டேனியல் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். இதில் கேஇஎன்சி அரசு மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரும், மாநில முதுகலை ஆசிரியர் சங்கத் தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருமான பிரபாகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அப்பள்ளியில் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்ற மற்றும் விளையாட்டு துறையில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு, விருது, சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
பின்னர், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடைமுறை வாழ்க்கை விழிப்புணர்வு மற்றும் கல்வியின் அவசியம் குறித்து பிரபாகரன் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து, அப்பள்ளி மாணவ-மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், நாடகங்கள் நடந்தன. இவ்விழாவை ஒருங்கிணைத்த அனைத்து பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத ஊழியர்களுக்கு பள்ளி நிறுவனத் தலைவர் ஜி.தனராஜ் வாழ்த்து தெரிவித்தார்.