கோத்தகிரி: கோத்தகிரி அருகே கிராமத்துக்குள் புகுந்த 4 கரடிகளை நாய் குரைத்து துரத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன. இந்நிலையில் கோத்தகிரி அருகே கன்னிகா தேவி காலனி கிராமத்தில் 4 கரடிகள் உலா வந்தன. அந்த கரடிகள் நீண்ட நேரமாக கிராமப் பகுதிக்குள் சுற்றித்திரிந்தன. அப்பகுதியில் உள்ள வளர்ப்பு நாய் ஒன்று அந்த கரடிகளை பார்த்து குரைத்தபடி துரத்தி சென்றன.
இதனால் அச்சம் அடைந்த கரடிகள் ஒத்தையடி பாதையில் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக அப்பகுதியை விட்டு சென்றன. இதை கண்ட கிராம மக்கள் செல்போனில் வீடியோ எடுத்து உள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த கரடிகள் கிராம மக்கள் யாரையாவது தாக்கும் முன்பு வனத்துறையினர் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.