மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் வசந்தா (62). இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த குமார் (எ) கோழிக்குமாரிடம் ரூ.1 கோடி மதிப்புள்ள வீட்டை அடமானம் வைத்து ரூ.10 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். ‘‘கடனை முழுமையாக செலுத்தி விடுகிறேன். வீடு அடமான கடன் பத்திரத்தை ரத்து செய்து கொடுங்கள்’’ என கோழிக்குமாரிடம் வசந்தா கேட்டபோது, ‘‘ரூ.15 லட்சம் நான் தருகிறேன்.
எனக்கே வீட்டை கிரயம் செய்து கொடு’’ என்று கேட்டு கோழிக்குமார் தாக்கியதாகவும், அவருக்கு ஆதரவாக துணை மேயர் நாகராஜன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி மதுரை மாவட்ட குற்றவியல் 4வது கோர்ட்டில் வசந்தா தரப்பில் ஆதாரத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிமன்றம் உத்தரவின்படி துணைமேயர் நாகராஜன், அவரது சகோதரர் ராஜேந்திரன், குமார் (எ) கோழிக்குமார், முத்துச்சாமி (எ) குட்டமுத்து மற்றும் முத்து ஆகிய 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.