திருமலை: தெலங்கானா அறநிலையத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா, நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா விவாகரத்து செய்து பிரிந்ததற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராமாராவ் தான் காரணம் என குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் கடும் சர்ச்சையாக மாறிய நிலையில், அமைச்சர் கொண்டா சுரேகா ஹனுமகொண்டாவில் நிருபர்களிடம் கூறுகையில், ‘கே.டி.ராமாராவ் என்னைப் பற்றி ஆத்திரமூட்டும் கருத்துகளை தனக்கு ஆதரவான சமூக வலைதளத்தில் பரப்பி பேசி வருகிறார். இதனால் உணர்ச்சிவசப்பட்டு, கே.டி.ராமாராவை விமர்சிக்கும் போது தற்செயலாக ஒரு குடும்பத்தை குறிப்பிட்டு பேசிவிட்டேன். எனக்கு யார் மீதும் தனிப்பட்ட வெறுப்பு இல்லை. நான் பேசியதில் வேறொருவரை காயப்படுத்தியதை அறிந்தே நான் நிபந்தனையின்றி கருத்துகளை வாபஸ் பெற்று மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் கே.டி.ராமாராவ் விஷயத்தில் நான் பின்வாங்க மாட்டேன். அவர் செய்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். எனக்கு அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்’ என பேசினார்.
* நடிகர் நாகார்ஜுனா வழக்கு
மாநில அமைச்சர் கொண்டா சுரேகா தனது குடும்ப உறுப்பினர்களின் கவுரவம் மற்றும் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக, நாகசைதன்யாவின் தந்தையான நடிகர் நாகார்ஜுனா நாம்பள்ளி நீதிமன்றத்தில் கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.