புதுடெல்லி: நடப்பாண்டு நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதுபோன்ற நாட்களில் விரதம் இருப்பவர்கள் அசைவம், பூண்டு, வெங்காயம் ஆகியவை கலந்த உணவுகளை சாப்பிட மாட்டார்கள். குறிப்பாக வட மாநிலங்களில் நவராத்திரி விழா மிகவும் சிறப்பாக கொண்டாப்படுவது வழக்கம். இதுபோன்ற சூழலில் உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் கேண்டீனில் அசைவம் கிடையாது, பூண்டு, வெங்காயம் போட்ட உணவு கிடையாது என்று இந்த ஆண்டு முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேண்டீன் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வழக்கறிஞர்கள் சங்கத்தின் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பல்வேறு வழக்கறிஞர்கள் ஒன்றாக இணைந்து, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்திற்கு கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளனர். அதில், ‘‘இந்த ஆண்டு முதல் முறையாக நவராத்திரி நாட்களில் நவராத்திரி உணவுகள் மட்டுமே வழங்கப்படும் என உச்சநீதிமன்ற கேன்டீன் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது எதிர்காலத்தில் மிகவும் தவறான முன்னுதாரணமாக அமையும். உணவு என்பது சுதந்திரம் அதில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் பார்வைக்கு எடுத்து செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.