பூந்தமல்லி: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் சா.மு.நாசர் பரிசுகளை வழங்கினார். திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞரின் கவிதைகள், திரைப்பட, நாடக வசனங்கள் ஒப்பித்தல் போட்டி நசரத்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற முதல் 3 மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசும், பாராட்டு சான்றும், கேடயமும் வழங்குவதோடு, போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர், மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜி.ரவி வரவேற்றார். ஒன்றிய திமுக செயலாளர் ப.ச.கமலேஷ் முன்னிலை வகித்தார். அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, கே.ஜே.ரமேஷ், மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் இறையன்பு குத்தூஸ், மாநில, மாவட்ட நிர்வாகள் ஜெரால்டு, ராஜி, காயத்ரி ஸ்ரீதரன், தெய்வசிகாமணி, அரசன், நகர செயலாளர் திருமலை மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.