Thursday, October 3, 2024
Home » கடந்த மாதம் வரவேற்பு முடிந்தவுடன் எஸ்கேப் ஆன மணமகனை கண்டுபிடித்து கோயிலில் வைத்து தாலிகட்டிய ஐடி பெண்: திருவள்ளூரில் அரங்கேறிய பரபரப்பு

கடந்த மாதம் வரவேற்பு முடிந்தவுடன் எஸ்கேப் ஆன மணமகனை கண்டுபிடித்து கோயிலில் வைத்து தாலிகட்டிய ஐடி பெண்: திருவள்ளூரில் அரங்கேறிய பரபரப்பு

by Francis

திருவள்ளூர்: கடந்த மாதம் திருமண வரவேற்பு முடிந்தவுடன் எஸ்கேப் ஆன மணமகனை கண்டுபிடித்து அழைத்துவந்து உறவினர்கள் முன்னிலையில் கோயிலில் வைத்து ஐடி பெண் திருமணம் செய்துகொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பகுதியை சேர்ந்தவர் தரன்(29). இவர் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவருடன் கும்பகோணம் பகுதியை சேர்ந்த அனுசியா(29) என்பவர் பணியாற்றியுள்ளார். இவர் மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர் என்று தெரிகிறது. இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில், இரண்டு வீட்டாரின் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதன்பிறகு திருமண பத்திரிகை அச்சடித்து கடந்த மாதம் 15ம்தேதி அரக்கோணம் சாலையில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இதனிடையே கடந்த 14ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடந்த பின் அன்றைய தினம் இரவு மணமகன் தரன் திடீரென மண்டபத்தில் இருந்து மாயமாகிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார் அவரை பற்றி விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. மாற்று சமுதாயத்தை சேர்ந்த பெண் என்பதால் இந்த திருமணம் வேண்டாம் என்று கருதி தப்பிவிட்டதாக கூறப்பட்டது.

இதனால் பெண்ணின் உறவினர்கள், திருத்தணி காவல் நிலையத்தில், எஸ்சி, எஸ்டி பிரிவின் கீழ் புகார் கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில், மணமகன் தரன் மற்றும் குடும்பத்தினர் 5 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், திருவள்ளூர் பகுதியில் சுற்றித்திரிந்த தரனை நேற்றிரவு அனுசியா கண்டுபிடித்தார். உடனடியாக அவரை உறவினர்கள் முன்னிலையில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள அம்மன் கோயிலுக்கு அழைத்துவந்துள்ளார். பின்னர் அங்கு வைத்து இரண்டு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் மணமகன் தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோர் முன்னிலையில் தாலி கட்டிக்கொண்டார். இதன்பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆஜரானார். இருவரையும் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவீட்டார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்பிறகு போலீசார் அறிவுரை கூறி மணமக்களும் அவர்களது குடும்பத்தினரும் அனுப்பி வைத்தனர்.

 

You may also like

Leave a Comment

five × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi