Wednesday, October 2, 2024
Home » கணவரை கொன்றவர்களை கைது செய்ய வேண்டும்: கலெக்டரிடம் மனைவி கோரிக்கை மனு

கணவரை கொன்றவர்களை கைது செய்ய வேண்டும்: கலெக்டரிடம் மனைவி கோரிக்கை மனு

by Karthik Yash

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கணவன் கொலை செய்யப்பட்டதை சந்தேக மரணம் என்று வழக்குபதிவு செய்யப்பட்டதை, கொலை வழக்காக வழக்குபதிவு செய்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் கோரிக்கை மனு அளித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா, ஒடந்தாங்கல் கிராமம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவருக்கு, பாக்கியலட்சுமி என்ற மனைவியும் ஒன்றரை வயதில் பெண் குழுந்தையும் உள்ளது. இவர், திருவண்ணாமலை மாவட்டம், மாங்கால் சிப்காட் பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.

முருகனுக்கும், பங்காளி உறவினர்களுக்கும் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக முருகனின் உறவினர்கள் பலமுறை கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், முருகன் மாங்கால் தனியார் தொழிற்சாலையில் பணி செய்துக்கொண்டிருந்தபோது, பங்காளி விஜயன் என்பவர் அடியாட்களுடன் சென்று முருகனை தாக்கிய சம்பவமும் நடைபெற்றுள்ளது. இதனால், பயந்துபோன முருகன், இதுகுறித்து காவல் நிலையத்திலும், திருவண்ணாமலை மாவட்டம் காவல் கண்காணிப்பாளரிடமும், தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி, தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு மனு அளித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 26ம்தேதி முருகன் மாங்கால் தொழிற்பேட்டைக்கு வேலைக்கு சென்றிருந்த நிலையில், உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பாக்கம் பகுதி சாலையோரத்தில், ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உத்திரமேரூர் போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த முருகனை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும் போலீசார், முருகன் சாலை விபத்தில் உயிரிழந்ததாக வழக்குபதிவு செய்து, முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், முருகனின் மனைவியான பாக்கியலட்சுமி, தனது கணவர் சாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறுவதில் சந்தேகம் இருப்பதாகவும், தங்களின் பங்காளிகளான விஜயன், பாஸ்கரன், முருகன், சரளா, ரேவதி, எல்லம்மாள் ஆகியோர் குடும்பத்தினர் திட்டமிட்டு, கூலிப்படையை வைத்து எனது கணவரை கொலை செய்து இருக்கலாம் என உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் வரை கணவரின் உடலையும் வாங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, உயிரிழந்த முருகனின் மனைவி பாக்கியலட்சுமி, தனது கைக்குழந்தை மற்றும் உறவினர்களுடன் நேற்று காஞ்சிபுரம் வந்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் கலைச்செல்வி மோகனை நேரில் சந்தித்து, “தனது கணவர் முருகன் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், சந்தேக மரணம் என்று வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதை கொலை வழக்காக வழக்குப்பதிவு செய்து, எனது கணவரை கொலை செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்ககூறி கோரிக்கை மனு அளித்துள்ளார்.

You may also like

Leave a Comment

1 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi