Tuesday, October 1, 2024
Home » நாளை மஹாளய அமாவாசை; ராமேஸ்வரம்,சேதுக்கரை கடல்களில் சிறப்பு ஏற்பாடு: பாதுகாப்பு பணியில் 500 போலீசார்

நாளை மஹாளய அமாவாசை; ராமேஸ்வரம்,சேதுக்கரை கடல்களில் சிறப்பு ஏற்பாடு: பாதுகாப்பு பணியில் 500 போலீசார்

by Neethimaan

ராமநாதபுரம்: நாளை மஹாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், தேவிப்பட்டிணம், சேதுக்கரை உள்ளிட்ட தீர்த்தக் கடல்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த புனித நாட்களில் புனித நீராடி, தர்ப்பணம், திதி கொடுத்து வழிபடும் புனித தீர்த்தங்களுடன் கூடிய கோயில்களில் முக்கியமானதாக ராமநாதபுரம் மாவட்டம் விளங்குகிறது. அந்த வகையில் நாளை புதன் கிழமை வரக்கூடிய மஹாளய அமாவாசைக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் இணைந்து சிறப்பாக செய்துள்ளனர்.

மஹாளய அமாவாசை முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த காலமாக தை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மஹாளய அமாவாசை கருதப்படுகிறது. இதனால் புனித தீர்த்தங்களில் நீராடி திதி கொடுத்தல், தர்ப்பணம் செய்வதால் ஆண்டு முழுவதும் தர்ப்பணம் செய்ததற்கான பலன் கிடைக்கும் என ஜதீகம் உள்ளது. இதில் முன்னோர் வழிபாட்டிற்கு மிகச்சிறந்த காலமாக, புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மஹாளய பட்ஷம் கருதப்படுகிறது. ஆவணி பவுர்ணமிக்கு அடுத்த நாள் முதல் புரட்டாசி மாத அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்ஷம் என அழைக்கப்படுகிறது.
இந்த நாட்களில் வழிபட்டால் முன்னோர்களின் ஆசி மட்டும் அல்ல, கடவுளின் பரிபூரண ஆசியும் கிட்டுவதாக நம்பிக்கை மிளிர்கிறது. அந்த வகையில் முகூர்த்த நாளாக கருதப்படும் புதன் கிழமை சிறப்புமிக்க மஹாளய அமாவாசை வருகிறது. கருட புராணம், விஷ்ணு புராணம், வராக புராணம் போன்ற புனிய நூல்களில் மகாளய பட்ஷத்தின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

புரட்டாசி மாதத்தில் வருகின்ற மஹாளய அமாவாசை தினத்தன்று நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து, நமக்கு ஆசி வழங்குவதற்காக வருவதாக கருதப்படுகிறது. இதனால் நம் முன்னோர்கள் நம் வீடு தேடி வந்து ஆசிர்வதிப்பர் என்ற நம்பிக்கையும் உள்ளது. இதனால் முன்னோர்களுக்கு திதிகொடுத்து, பிறருக்கு தானங்கள் செய்வது வழக்கம். இதனால் மஹாளய தினத்தன்று பித்ருக்களுக்கு திதி கொடுப்பதை மக்கள் தலைமுறை, தலைமுறையாக வழக்கமாக கடைப்பிடித்து வருகின்றனர். இந்தியாவில் வடக்கே காசியும், தெற்கே தமிழ்நாட்டிலுள்ள ராமேஸ்வரமும் முக்கிய தீர்த்த தலமாக விளங்குகிறது. ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள், தேவிப்பட்டிணம் நவபாஷன தீர்த்தக் கடற்கரை, திருப்புல்லாணி சேதுக்கரை, கடலாடி அருகே மாரியூர் ஆகிய கடற்கரைகள் ராமாயணம் போன்ற புராணங்கள், இசிகாசங்களுடன் தொடர்புடைய தீர்த்த தலங்கள் என்பதால் லட்சக்கணக்கானோர் வந்து புனித நீராடி முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தல் உள்ளிட்ட சடங்குகளை செய்வதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர்.

இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து புனித தீர்த்தமாடிய பிறகு ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்பிகை உடனுரை ராமநாத சுவாமி கோயில், தேவிப்பட்டிணம் கடற்கரையில் உள்ள நவபாஷன தீர்த்தம், அக்னி தீர்த்தம், ராமர் தீர்த்தம், அங்குள்ள கடலடைத்த பெருமாள் கோயில். திருப்புல்லாணி சேதுக்கரை கடல், சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர், திருப்புல்லானி பத்மாஷினி தாயார் உடனுறை ஆதிஜெகநாதபெருமாள் கோயில். கடலாடி அருகே உள்ள மாரியூர் கடல் மற்றும் பவளநிறவள்ளியம்மன் உடனுரை பூவேந்தியநாதர் கோயில் ஆகியவற்றில் தரிசனம் செய்தும், மோட்ச தீபங்கள் ஏற்றியும் வழிபாடு செய்கின்றனர்.

இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தூய்மை பணிகள் செய்யப்பட்டு, சுண்ணாம்பு பொடி, கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளை செய்து, தற்காலிக மருத்துவ முகாம், 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளது. குடிநீர், கழிவறை, உடை மாற்றும் அறை போன்ற ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத் துறை மற்றும் ராமநாதபுரம் சமஸ்தானம்,தேவஸ்தானம் ஆகியவை சிறப்பாக செய்துள்ளனர்.நகரப்பகுதி மற்றும் கடற்கரை பகுதிகளில் வாகன நெரிசலை தவிர்க்க தற்காலிக மாற்று வழிகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து காவல் மற்றும் பாதுகாப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

100 சிறப்பு பஸ் இயக்கம்
மஹாள அமாவாசையை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இருந்து ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதுபோன்று சேதுக்கரை, தேவிப்பட்டிணத்திற்கு ராமநாதபுரத்தில் இருந்தும், மாரியூர்க்கு சாயல்குடி, மலட்டாறு முக்குரோடு வழியாக கூட்டத்திற்கு ஏற்றவாறு சிறப்பு பஸ்கள் என மொத்தம் 100 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் மற்றும் காரைக்குடி கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு அவசியம்
கடற்கரைகளில் வாகனம் மற்றும் பொதுமக்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வாகனங்கள் குறிப்பிட்ட தூரம் மட்டுமே அனுமதிக்கப்படும். இதனால் உரிய பார்க்கிங்கில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். நீராடி விட்டு களையும் துணிகளை உரிய தொட்டியில் போடவேண்டும். தங்க நகை, மொபைல், பணம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள், உடன் அழைத்து வரப்படும் குழந்தைகள் முதியோர்களை பத்திரமாக பாதுகாத்து கொள்ள வேண்டும். உதவிகள் தேவைப்பட்டால் காவல் கட்டுபாடு அறை மற்றும் கோயில் நிர்வாகத்தில் தெரிவிக்கலாம்.

You may also like

Leave a Comment

17 + twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi