கோவை: துப்பாக்கி குண்டு காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஏடிஎம் கொள்ளையன் அஜர் அலியின் வலது காலை டாக்டர்கள் நேற்று அகற்றினர். கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏடிஎம்களில் ரூ.65 லட்சத்தை கொள்ளையடித்து கன்டெய்னரில் வந்த கொள்ளையர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பிடிபட்டனர். அப்போது போலீசாரை தாக்கி தப்ப முயன்ற ஜூமாந்தீன் என்கவுன்டரில் சுடப்பட்டு உயிரிழந்தான்.
இதில், அஜர் அலி (32) என்பவன் வலது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. தவிர, இடது காலிலும் முறிவு ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வலது காலிற்கு செல்லும் ரத்தம் தடைபட்டு, கால் செயலிழக்கும் நிலை ஏற்பட்டது. இதே நிலை தொடர்ந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருந்தது. இதனையடுத்து, அஜர் அலியின் வலது காலை டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.