சிங்கம்புணரி, அக்.1: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் புழுதிபட்டி மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த சரக்கு லாரியின் பின்பகுதியில் மணல் ஏற்றி வந்த லாரி மோதி இருவர் படுகாயம் அடைந்தனர். மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற சரக்கு லாரி புழுதிபட்டி பேருந்து நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது.
அப்போது கமுதியில் இருந்து மணல் ஏற்றிய லாரியில் ரங்கசாமி, குமார் ஆகியோர் திருச்சி நோக்கி சென்றபோது புழுதிபட்டி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி பின் பகுதியில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் மணல் லாரியின் முன்பகுதி நொறுங்கியதில் ரங்கசாமி, குமார் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரும் மீட்டு திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து புழுதிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.