கோவை, அக். 1: சிந்துசமவெளி நாகரிகத்தை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் இயக்குனராக பணியாற்றிய சர்.ஜான்.மார்ஷல் உலகிற்கு அறிவித்தார். இந்த நகாரிகம் கண்டறியப்பட்டு 2024-ம் ஆண்டுடன் நூறு ஆண்டுகளாகிறது. இதையடுத்து, கோவை அரசு கலைக்கல்லூரி வரலாற்று துறை சார்பில் சிந்து சமவெளி நாகரிக நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில், விளக்கப்படங்கள், மாதிரிகள் கண்காட்சி நடந்தது. இதனை கல்லூரி முதல்வர் ஏழிலி துவக்கிவைத்தார். இதில், வரலாற்றுத்துறை தலைவர், பேராசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த கண்காட்சியில் ஹரப்பா நாகரிக அமைப்பு மாதிரி, அங்கு கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகள், பொம்மைகள், முத்திரைகள், எழுத்து மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. குறிப்பாக, பழுப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள், நடன மங்கைகள், உருவச்சிலைகள், காளை, மத குருவின் உருவம், பெண் மற்றும் ஆண் முக வடிவசிலை, சிந்து சமவெளி நாகரிகத்தில் பயன்படுத்திய செங்கற்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. தவிர, சிந்து சமவெளி நாகரிகத்தின் ஒரு நகரமான மொகஞ்சதாரோவின் நகர மாதிரி, கட்டமைப்பு, தானிய கிடங்கு, பெருங்குளியல் அமைப்பு போன்றவை இடம் பெற்றிருந்தன.