சென்னை: கலைத்துறையில் சிறந்து விளங்குவோர்க்கு ஐ.ஐ.டி சேர்க்கையில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என இயக்குனர் காமகோடி தகவல் தெரிவித்துள்ளார். மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.எஸ் பள்ளியில் தஞ்சை அனிருத் தேவா என்ற சிறுவனின் மிருதங்க அரங்கேற்றம் நடைபெற்றது. இதில் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சீனிவாசன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி பேசுகையில், ஐ.ஐ.டி. சேர்க்கையில் கடந்த ஆண்டு விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த இடஒதுக்கீட்டின் மூலம் 5 சாம்பியன்கள் ஐ.ஐ.டி.யில் இணைந்தனர். அதுபோல வரும் கல்வியாண்டில் இருந்து கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான இடஒதுக்கீடும் அறிமுகம் செய்யப்படும். எனவே மாணவர்கள் கலைத் துறையிலும் நன்கு ஆர்வம் காட்டி, அதன் மூலமாகவும் ஐ.ஐ.டி.யில் நுழைய முடியும் என்றார்.