உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே, திருப்புலிவனம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு, வினாடி-வினா போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பானுமதி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சுகுமாரன் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட திட்ட அலுவலர் பா.கந்தன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில், ஊட்டமளிக்கும் வளர் இளம் பெண்கள் ரத்த சோகையை தவிர்த்தல், குழந்தை வளர்ச்சியினை கண்காணித்தல், சரியான நேரத்தில் அளவான இணை உணவுகள் மற்றும் அதனை எடுத்துக்கொள்ளும் முறைகள், சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகள் நடுதல், ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த ஒருங்கிணைந்து செயல்படுதல் உள்ளிட்ட பல்வேறு வகையிலான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, கல்லூரி மாணவியர்களுக்கிடையே வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற கல்லூரி மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர், ஊட்டச்சத்து உணவுகள் குறித்தான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும், நிகழ்ச்சியில் உட்டச்சத்து உணவு கண்காட்சி வைக்கப்பட்டு ஊட்டச்சத்து உணவுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள், கல்லூரி மாணவியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.