Tuesday, October 1, 2024
Home » பல சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேக்கம்; நெல்லை, தூத்துக்குடியில் பரவலாக இடி, மின்னலுடன் மழை: பலத்த காற்றால் 5 மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் துண்டிப்பு, குடிநீர் விநியோகம் பாதிப்பு

பல சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேக்கம்; நெல்லை, தூத்துக்குடியில் பரவலாக இடி, மின்னலுடன் மழை: பலத்த காற்றால் 5 மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் துண்டிப்பு, குடிநீர் விநியோகம் பாதிப்பு

by Francis

நெல்லை: நெல்லை, தூத்துக்குடியில் நேற்று இரவு பலத்த இடி, மின்னலுடன் கன மழை கொட்டியது. இதனால் பெரும்பான்மையான பகுதிகளில் 5 மணி நேரத்துக்கு மேல் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் அணைப்பகுதிகளில் மழை பெய்துள்ளது. கோடை காலம் முடிந்த நிலையிலும், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடுமையான வெயில் கடந்த 3 மாதங்களாக வாட்டி வதைத்தது. பொதுவாக அக்னி நட்சத்திர காலங்களில் மட்டும் தான் வெப்ப நிலை 100 டிகிரியை தாண்டுவது வழக்கம். ஆனால் கடந்த ஓரிரு வாரங்களாக நெல்லை மாவட்டத்தில் 103 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்நிலையில் குமரி கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக நெல்லை, தூத்தக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை தகவல்கள் தெரிவித்தன. நேற்றுமுன்தினம் நண்பகலில் வெப்பநிலை குறைந்து வானம் மேகமூட்டத்துடன் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

இந்நிலையில் நேற்று இரவும் 9.30 மணி பலத்த இடி, மின்னல் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையும், காற்றும் ஒரு சேர இருந்ததால் பல இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. மகாராஜநகர், ஹைகிரவுண்ட் சாலை, பாளை. அரசு மருத்துவமனை பகுதிகளில் பல இடங்களில் இரவு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. அந்த பகுதிகிளல் மின்வாரிய லைன்கள் அறுந்து விழுந்தன. எனினும் கொட்டும் மழையிலும் மின் வாரிய ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். இரவு 12 மணி வரை இடி, மின்னல் காற்றுடன் பலத்த மழை பெய்தது. வழக்கத்தை விட நேற்றிரவு இடியும், மின்னலும் அதிகம் இருந்ததால் கயத்தாறு, மணப்படை வீடு ஆகிய இடங்களில் மின்கருவிகளில் பழுது ஏற்பட்டது.

இதனால் நெல்லை மாவட்டத்தில் நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை, மகாராஜநகர், ஹைகிரவுண்ட் மருத்துவமனை, வி.எம். சத்திரம், கேடிசி நகர், வண்ணார்பேட்டை, கிருஷ்ணாபுரம், கோட்டூர் ரோடு, பாளை மார்க்கெட், என்ஜிஓ காலனி, முன்னீர்பள்ளம், தருவை, சேரன்மகாதேவி வரை பெரும்பான்மையான இடங்களில் இரவு 10.45 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மின்சப்ளை துண்டிக்கப்பட்டது. சில இடங்களில் மின்சப்ளை சீராக அதிகாலை 8 மணி ஆனது. மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதால் நெல்லை மாநகராட்சி நீரேற்று நிலையங்களில் மின் மோட்டார் இயக்க முடியவில்லை. இதனால் குடிநீர் விநியோகமும் துண்டிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 84 மிமீ மழை பதிவானது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, பாளை. மார்க்கெட், நெல்லை கமிஷனர் அலுவலகம் எதிரேயுள்ள பார்வையற்றோர் பள்ளி சாலை, சமாதானபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கிக் கிடந்தது. பாளையங்கோட்டை ஆயுதப்படை எதிரேயுள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுகள் முழுவதும் அந்த பகுதி சாலைகளில் வெளியேறியது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது.
நெல்லை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்: அம்பை-40.40 மிமீ, சேரன்மகாதேவி- 29.60, மணிமுத்தாறு- 23.80, நாங்குநேரி-16, பாளையங்கோட்டை-84, பாபநாசம்-40, ராதாபுரம்-21, நெல்லை-49, சேர்வலாறு அணை- 35, கன்னடியன் அணைக்கட்டு-37.40, களக்காடு- 10.40, கொடுமுடியாறு அணை-4, மூலக்கரைப்பட்டி- 25, நம்பியாறு அணை-10 மிமீ. மாஞ்சோலையில் 15 மிமீ, காக்காச்சியில் 18 மிமீ, நாலுமுக்கு 26 மிமீ, ஊத்து 21 மிமீ மழையும் பதிவானது.

தென்காசி மாவட்டத்தில் மழை அளவு: கடனா- 43 மிமீ, ராமநதி-36, கருப்பாநதி-67.50, குண்டாறு-46.80, அடவிநயினார்- 35, ஆய்க்குடி-42, செங்கோட்டை- 48.40, தென்காசி- 42, சங்கரன்கோவில்- 2, சிவகிரி-4 மீமீ.
தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், நாளை (அக்.1ம் தேதி) முதல் 3ம் தேதி வரையும் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

 

 

You may also like

Leave a Comment

2 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi