சென்னை: சென்னையில் சிஎல்இ (தோல் ஏற்றுமதிக்கான கவுன்சில்), தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆகியவை இணைந்து போதை பொருள் இல்லாத சமூகத்திற்கான விழிப்புணர்வு மாராத்தான் போட்டியை நடத்தியது. இதை கொடியசைத்து தொடங்கி வைத்து அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், காவல்துறை அலுவலர்களுடன் இணைந்து போதை பொருட்களை தடுக்க 391 குழுக்களாக பிரிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கடந்த 15ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 3,06,157 கடைகள் மற்றும் குடோன்கள் மற்றும் வாகனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற பொருட்களை விற்பனை செய்த 19,822 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு இருக்கிறது, பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பொருட்கள் 1,32,890 கிலோ. இதன் மொத்த மதிப்பு ₹10.87 கோடி. இவ்வாறு அவர் கூறினார்.