திருப்பூர், செப்.30: திருப்பூர் மாநகரில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் புகுந்தது. மேலும் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைபட்டது. திருப்பூரில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
தொடர்ந்து இரவு திடீரென ராயபுரம், ஆண்டிபாளையம், மங்கலம், கருவம்பாளையம்,செரிப் காலனி, கல்லாங்காடு, பாளையக்காடு, கோல்டன் நகர், மன்னரை, பிச்சம்பாளையம், காந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த மழை காரணமாக வளம் பாலம் அருகே மழை நீர் வழிந்தோடியது. மழை காரணமாக பல்வேறு பகுதியில் மின்சாரம் தடைபட்டது. மேலும், பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. நேற்று முன் தினம் இரவு பெய்த மழையால் மின்மயானம் அருகே தேங்கி நின்ற மழை நீர் அந்த வழியாக சென்ற கார் நேற்றி சிக்கியது. தொடர்ந்து அப்பகுதியினர் உதவியோடு காரை மீட்டனர்.