ஆர்.எஸ்.மங்கலம்,செப்.30: ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மூலமாக, சிலுகவயல் கிராமத்தில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் மாவட்ட தொடர்பு அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. புல்லமடை ஊராட்சி தலைவர் கனிமொழி இளையராஜா முகாமை தொடங்கி வைத்தார். இம்முகாமிற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுயம்புலிங்கம் முன்னிலை வகித்தார். என்.எஸ்.எஸ் மாவட்ட தொடர்பு அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் திட்ட அலுவலர் விக்டர் ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் நாட்டு நலப்பணிகள் குறித்தும், சுகாதார விழிப்புணர்வு, போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து மாணவர்களிடையே உரையாற்றினர். மேலும் முகாம் நடைபெற்ற பகுதிகளில் துப்புறவு பணிகளை மேற்கொண்டதுடன் அப்பகுதியில் மரக்கன்றுகள் நட்டனர். இம்முகாமில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், ஊராட்சி துப்புறவு பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.