திருத்தணி, செப். 30: திருத்தணி அருகே பள்ளிப்பட்டு பகுதியில் செயல்பட்டு வந்த அரசு மணல் குவாரி ஓராண்டுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால், திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் மணலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் காரணத்தால் கட்டிடப் பணிகள் முடங்கி வருகிறது. இந்நிலையில், திருத்தணி அருகே ஆந்திர எல்லை பகுதியில் அமைந்துள்ள நகரி கொசஸ்தலை ஆற்றில் இருந்து இரவு நேரங்களில் லாரிகள் மற்றும் டிராக்டர்களில் மணல் நிரப்பி கொண்டு திருத்தணி, திருவலாங்காடு, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் மணல் கொள்ளை விற்பனையில் சிலர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் முதலமைச்சர் பாதுகாப்பு பணிக்காக திருத்தணி உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இருந்து போலீசார் காஞ்சிபுரம் சென்று விட்ட நிலையில், இரவு முழுவதும் விடிய விடிய லாரி மற்றும் டிராக்டர்களில் மணல் கடத்தி வந்து விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, திருத்தணி நகரில் முக்கிய சாலைகள் மற்றும் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் மணல் குவித்து வைத்திருந்திருந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.