காஷ்மீர்: ஹிஸ்புல்லா தலைவர் கொலையை கண்டித்து ஸ்ரீநகரில் ஷியா பிரிவினர் போராட்டம் நடத்தினர். மாஜி முதல்வர் தனது பிரசாரத்தை ஒத்திவைத்தார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தை கண்டித்து, நேற்று காஷ்மீரின் பல பகுதிகளில் ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவான போராட்டங்கள் நடந்தன.
ஸ்ரீநகர் மற்றும் புட்காமில் நடந்த போராட்டத்தில், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்தால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன.போராட்டம் வன்முறையாக மாறாமல் தடுக்க நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே ஹசன் நஸ்ரல்லா படுகொலை சம்பவத்தை கண்டித்து, நேற்று தேர்தல் பிரசாரத்தை மாஜி முதல்வரான பிடிபி தலைவர் மெகபூபா முப்தி தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார். ஷியா பிரிவைச் சேர்ந்த ஸ்ரீநகர் லோக்சபா எம்பி அகா ருஹுல்லா மெஹ்தி, தனது தேர்தல் பிரசாரத்தை நிறுத்தினார். புத்காம் பகுதியானது ஷியா முஸ்லீம்களின் கோட்டை என்பதால், நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.