சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 டிசம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டம் நாசரத்பேட்டையில் உள்ள ஓட்டல் ஒன்றின் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஹேம்நாத்தை விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களை முறையாக கவனத்தில் கொள்ளாமல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, அந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.