பெங்களூரு: சிறப்பு நீதிமன்ற உத்தரவின்பேரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது லோக் ஆயுக்தா காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. முடா நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் வழங்கியதையடுத்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில், சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கத் தடை இல்லை என்று உத்தரவிட்ட நீதிமன்றம், சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து சித்தராமையா முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என பாஜகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஆனால், பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன், இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என சித்தராமையா கூறி வருகிறார். சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின்படி லோக் ஆயுக்தா காவல்துறையினர் இன்று சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். முடா முறைகேடு வழக்கில் சித்தராமையா(ஏ1), அவரது மனைவி பார்வதி(ஏ2), மைத்துனர் மல்லிகார்ஜுனசுவாமி(ஏ3) ஆகிய மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.