Friday, September 27, 2024
Home » தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்காக நாற்று பறித்து நடும் பணி தீவிரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்காக நாற்று பறித்து நடும் பணி தீவிரம்

by Lakshmipathi

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்காக நாற்று பறித்து நடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் குறுவை அறுவடை முடிந்துள்ள நிலையில் தற்போது சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக விவசாயிகள் தங்கள் நிலங்களை தண்ணீர் விட்டு உழவு செய்தும் நாற்றாங்கால் தயார் செய்தும் வந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம், பூண்டி உள்ளிட்ட பகுதியில் சம்பா சாகுபடிக்காக நாற்று விட்டு அதை பறித்து நடும் பணிகளில் விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் தீவிரம் காட்டினர். தமிழகத்தின் நெல் களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சம்பா தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம்.

காவிரி டெல்டா பாசத்திற்காக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது அனைத்து ஏரி குளங்களிலும் தண்ணீர் இருப்பதால் விவசாயிகள் சம்பா சாகுபடிக்காக வயல்களை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வயலில் உள்ள களைகள் அப்புறப்படுத்தப்பட்டு டிராக்டரை கொண்டு உழும் பணிகளிலும், ஒரு சில இடங்களில் நாற்றாங்களை பறித்து நடவு பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பா சாகுபடி பொருத்தவரையில் விவசாயிகள் நீண்ட நாட்கள் ரகமான நெல்லை தான் சாகுபடி செய்வார்கள். விவசாயிகள் பலரும் பாய்நாற்றங்கள் சாகுபடியும் சில விவசாயிகள் நாற்று விடும் பணிகளிலும் ஈடுபட்டனர். இதனால் விவசாய பணிகள் தஞ்சாவூர் பகுதியில் மும்மரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் மொத்தமாக 3.45 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடிக்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஒரு பக்கம் கல்லணை கால்வாய் மறுபுறம் வெண்ணாறு ஆற்றுப் பாசனத்தை நம்பிய விவசாயிகள் உள்ளனர். ஒரு சிலர் பம்பு செட்டு வைத்து முப்போகம் சாகுபடி செய்கின்றனர். தற்போது ஆறுகளிலும், வாய்க்கால்களிலும் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. இதனால் சம்பா சாகுபடியை தொடங்கியுள்ளோம். வயலில் உள்ள களைகளை முழுமையாக அகற்றி உழுது தயார்படுத்தி தண்ணீர் தேக்கி உள்ளோம்.

இதனால் வயல்களில் காற்றோட்டம் நன்கு இருக்கும். வயலில் நாற்று நடும்போது மிகவும் எளிதாக இருக்கும். சிலர் நாற்று நடும் பணிகளிலும் சிலர் பாய் நாற்றங்கள் வாங்கி நடும் பணிகளிலும் இறங்கி உள்ளனர். ஒரு சிலர் நாற்றங்காலை பறித்து நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் பணிகளை செய்ய தொடங்கியுள்ளதால் இடுபொருள்கள் அனைவருக்கும் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

You may also like

Leave a Comment

two × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi