தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம் அமைப்பது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம் அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளது.
இதற்காக பெருந்திட்ட அறிக்கை தயாரிக்கும் ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஏற்கனவே ஆப்ரேட்டரை தேர்வு செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டது. புதிய விமான பயிற்சி நிலையம் மூலம் விமான பயிற்சி அளிக்கும் நிறுவனங்களின் முதலீட்டையும் ஈர்க்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
விமான பயிற்சி நிறுவனம் தொடங்க சரியான இயற்கை சூழல் கோவில்பட்டியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2ஆம் உலக போரின் போது கோவில்பட்டியில் விமான ஓடுதளம் அமைத்த ஆங்கிலேயர்கள் தங்களது படையின் போர் விமானங்களை இயக்க பயன்படுத்தினர்.