வாஷிங்டன்: அமெரிக்காவில் மேலும் ஒரு இந்து கோயில் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். இந்துக்களே திரும்பி செல்லுங்கள் என வாசகங்களை எழுதி சென்றுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் மெல்வில்லேயில் சுவாமிநாராயண் கோயில் அமைந்துள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய இந்து கோயில் இதுவாகும். கடந்த 17ம் தேதி மர்ம நபர்கள் இந்த கோயிலில் தாக்குதல் நடத்தினர். கோயில் சேதப்படுத்தப்பட்டதற்கு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்தது.
இந்த சம்பவம் நடந்து 10 நாட்கள் கூட ஆகாத நிலையில் கலிபோர்னியா மாகாணம் சாக்ரமென்டோவில் உள்ள சுவாமி நாராயண் கோயிலுக்குள் நேற்றுமுன்தினம் மர்மநபர்கள் புகுந்து அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். மேலும் இந்துக்களே திரும்பி செல்லுங்கள் என்பது உள்பட பல்வேறு வெறுப்பு வாசகங்களையும் எழுதி உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு சுவாமி நாராயண் கோயில்களை நிர்வகிக்கும் பிஏபிஎஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
பிஏபிஎஸ் அமைப்பு சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், சாக்ரமென்டோ, சுவாமி நாராயண் கோயில் பெரிய சமூகத்தை ஆதரிப்பதற்காக எண்ணற்ற செயல்பாடுகள் மற்றும் திட்டங்களில் ஈடுபட்டுள்ள கோயில்.கோயிலை மர்ம நபர்கள் சேதப்படுத்தியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்து விரோத வன்ம உணர்வுடன் சிலர் செயல்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்துள்ளது.