புதுக்கோட்டை: அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக மதசார்பின்மை குறித்து பேசிய ஆளுநர் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆளுநர் மதசார்பின்மை குறித்து பேசி உள்ளது கண்டிக்கத்தக்கது, வருந்தத்தக்கது. இந்தியாவில் உள்ள யாருமே இது போன்ற கருத்துக்களை தெரிவிக்க மாட்டார்கள். அரசியலமைப்பு சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசிய ஆளுநர் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் சட்ட கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் மிக சிறப்பாக உள்ளது.
நீதி அரசர்கள் ஒரு சில விஷயங்களை வைத்து கருத்து கூறியுள்ளனர். நீதி அரசர்கள் தமிழகத்தில் உள்ள சட்ட கல்லூரிகளில் சென்று ஆய்வு நடத்தி கொள்ளலாம். தனியார் சட்ட கல்லூரிகளை விட பன்மடங்கு அதிகமாக அடிப்படை வசதிகள் அரசு சட்ட கல்லூரிகளில் உள்ளது. முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு போட்டால் ஏன் வழக்கு போடுகிறீர்கள் என்று கேட்கிறீர்கள். வழக்கு போடவில்லை என்றால் ஏன் வழக்கு போடவில்லை என்று கேட்கிறீர்கள். விசாரணை முழுமையாக முடிவடைந்து குற்றச்சாட்டுகள் உண்மை என்று தெரியும் பட்சத்தில் தான் வழக்கு போடப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.