தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆலம்பாடி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கேயம்,கும்பளாச்சேரி உள்ளிட்ட ஒருசில நாட்டு மாட்டு இனங்களையே விவசாயிகள் பெரும்பாலும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். காங்கேயம், கும்பளாச்சேரி போன்ற இனங்கள் போல ஆலம்பாடி இன மாடுகள் பெரிய அளவில் பிரபலம் ஆகவில்லையென்றாலும் இந்த இனத்திற்கென்று சில சிறப்புகள் உள்ளன. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் இருந்து 5 கி.மீ தொலைவில் தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள கிராமமே ஆலம்பாடி. இந்த ஊரில் தோன்றிய மாட்டினமே ஆலம்பாடி நாட்டு மாடு என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை மாட்டினங்கள் வண்டி இழுப்பதற்கும், விவசாயப் பணிகளுக்கும் அதிகளவில் பயன்படுகின்றன. சுறுசுறுப்பாக வேலை செய்யக்கூடிய ஆலம்பாடி மாடுகள் நீண்ட கால்களையும், முன்னே தள்ளிக் கொண்டிருக்கும் நெற்றியையும், கனத்த கொம்பையும் கொண்டிருக்கும். இந்த மாட்டினங்களுக்கு குறைந்த அளவு தீவனமே போதுமானது. பராமரிப்பு செலவும் குறைவு.
இந்த மாடுகள் தற்போது மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 10 ஆயிரம் ஆலம்பாடி மாடுகள் மட்டுமே உள்ளன. தர்மபுரிமாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தில் பூதனஅள்ளி, கோவிலூர், இலளிகம் உள்ளிட்ட பகுதிகள், பென்னாகரத்தைச் சுற்றியுள்ள ஒகேனக்கல், ஊட்டமலை, பெரும்பாலை, ஏரியூர் உள்ளிட்ட பகுதிகள், கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப் பகுதிகளான தேன்கனிக்கோட்டை, நாட்றாம்பாளையம், அஞ்செட்டி ஆகிய பகுதிகளில் மட்டுமே வளர்க்கப்படுகிறது. நாட்டு இன மாடுகளைப் பாதுகாத்து வளர்ப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் தமிழர்கள்தான்.இயந்திரங்கள் இல்லாத காலத்தில் நாட்டு இன மாடுகள்தான் உழவு ஓட்டுதல், விளைபொருட்களைச் சந்தைக்குக் கொண்டு செல்லுதல் போன்ற பணிகளுக்கும், பால் உற்பத்திக்கும் பயன்படுத்தப்பட்டன. விவசாயத்தில் நவீன இயந்திரங்கள் புகுந்த பின்னர் மாடுகளைப் பயன்படுத்தும் வழக்கம் குறைந்தது. வீடுகளில் நாட்டு மாடுகள் வளர்ப்பது குறைந்து, கலப்பின ஜெர்சி மாடுகள் வியாபார நோக்கத்தில் பாலுக்காக வளர்க்கப்பட்டதால் நாட்டு இன மாடுகள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டன. இந்த வரிசையில் ஆலம்பாடி நாட்டு மாடு இனமும் அழிவின் விளிம்புக்கு சென்றுவிட்டது.
இதனிடையே ஆலம்பாடி நாட்டு மாடுகள் குறித்து தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன் பயனாக ஆலம்பாடிகால்நடை இன ஆராய்ச்சி நிலையத்தை தர்மபுரியில் தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதன் அடிப்படையில் ₹4 கோடி மதிப்பீட்டில் தொடங்குவதற்கான அனுமதியும், நிதியும் கோரி கடந்த 2018ம் ஆண்டில், தமிழ்நாடு அரசிடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக ஆலம்பாடி பசுக்களைக் காக்கவும், இன விருத்தி, உறைவிந்து மூலம் சினை ஊசி செலுத்துதல் போன்ற பணிகளைமேற்கொள்ளவும் ஆலம்பாடி இன கால்நடை ஆராய்ச்சி நிலையமானது, காரிமங்கலம் அருகே பல்லேனஅள்ளி கிராமத்தில் 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது.31 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிட, தினமும் கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். அவர்கள் நாட்டு மாடு வளர்ப்பு குறித்து பயிற்சியும் பெற்றுச் செல்கிறார்கள். மேலும் கால்நடை தீவன வளர்ப்பு குறித்தும் கேட்டறிந்து செல்கிறார்கள்.
இதுகுறித்து ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முரளி கூறுகையில், ‘‘மிகவும் பாரம்பரியமான ஆலம்பாடி நாட்டு மாடுகளை மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும் தர்மபுரி மாவட்டத்தில் ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையம், 31 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 12 ஏக்கரில் தீவனப்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. மாடுகளுக்காக 3 கொட்டகைகள் கட்டப்பட்டுள்ளன. நாட்டு மாடுகள் பொதுவாக நோய் எதிர்ப்புத்திறனை அதிகம் கொண்டிருக்கும். நாங்கள் முதலில் 4 மாடுகள் வாங்கி வந்து வளர்த்தோம். அவை கன்றுகள் ஈன்று தற்போது 44 மாடுகளாக பெருகி உள்ளன. இதில் 3 கன்றுகளை விற்பனை செய்துள்ளோம். மேலும் பால் உற்பத்தியும் இங்கு நடக்கிறது. ஒரு லிட்டர் பால் ₹60க்கு விற்பனை செய்கிறோம். பால்கோவா ஒரு கிலோ ₹400 என விற்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மண்புழு உரம் கிலோ ₹10க்கும், நாட்டு மாட்டுச்சாணம் ஒரு டன் ₹2500க்கும் விற்கப்படுகிறது. தற்போது இங்குள்ளவற்றில் பெரும்பாலானவை கன்றுகளாகவே உள்ளன. இவை வளர சுமார் 3 ஆண்டு காலம் ஆகும். அதன்பின்னரே செயற்கை கருவூட்டல் மூலம், நாட்டு மாடுகளை இனப்பெருக்கம் செய்ய உள்ளோம். ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையம் மூலம் அழிவின் விளிம்பில் இருந்து அவை காக்கப்பட்டு வருகின்றன’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்புக்கு: முரளி: 94423 85520.